முஹம்மது நபியின் கேலிச்சித்திரங்களைக் காட்டி பாடம் நடத்தியதாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவா் தீவிரவாதச் சந்தேக நபரான மாணவனால் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து பாரிஸ் புறநகர் பகுதியில் அமைந்திருந்த ஒரு மசூதி நேற்றுமுதல் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்தப் படுகொலைச் சம்பத்தின் பின்னர் முஸ்லிம்கள் மீதான வெறுப்புணா்வுகள் தலைதூக்கிவரும் நிலையில் இந்த மசூதியை தற்காலிகமாக மூட பிரான்ஸ் அரசு நேற்று உத்தரவிட்டது.
வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பாட்டி படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் தலைநகரின் வடகிழக்கே உள்ள புறநகர்ப் பகுதியில் உள்ள பாண்டின் மசூதியின் பேஸ்புக் பக்கத்தில் அவருக்கு எதிரான வெறுப்பூட்டும் வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெறுக்கத்தக்க செய்திகளைப் பரப்புவோர், தீவிரவாதத்தை ஊங்குவிக்கும் வகையில் பிரசங்கம் செய்யும் மதத் தலைவா்கள் மற்றும் பிரான்ஸின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவா்கள் என நம்பப்படும் வெளிநாட்டினருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மசூதிக்கு வெளியே ஒட்டப்பட்ட மூடல் தொடர்பான உத்தரவு அறிக்கையில் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மதச்சார்பற்ற நாடான பிரான்சில் ஜனநாயகத்தின் ஆழமாக மதிக்கப்படுகின்ற கருத்துச் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு இஸ்லாமியரால் அரச ஊழியர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் குழப்பங்களைத் தூண்டியுள்ளதுடன், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாக்குதலை இஸ்லாமிய பிரிவினைவாதச் செயல் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் விழித்து வருகிறார். பிரான்சின் முஸ்லிம் சமூகத்திற்குள் உள்ள சில பிரிவினர் பிரெஞ்சு குடியரசின் பாரம்பரியத்தை மீறி பழமைவாத இஸ்லாமிய நம்பிக்கைகளை திணிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அவா் விமர்சித்துள்ளார்.
இதேவேளை, கடும் விமர்சனங்களை அடுத்து "எங்கள் மதத்தில் வன்முறைக்கு இடமில்லை" என பாண்டின் மசூதி திங்கட்கிழமை வெளியிட்ட ஒரு பேஸ்புக்கில் பதிவில் தெரிவித்துள்ளது. "இந்த காட்டுமிராண்டித்தனத்தை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்." எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.